மனசு ஒரு தினுசு!
தேவிபாலா
Editora: Pocket Books
Sinopse
நர்த்தனா வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரமாகிவிட்டது. அவளிடம் வேலை தவிர வேறெதுவும் பேசவில்லை அமர். வேறு எங்கும் சுற்றாமல் அவனும் எட்டுமணி நேரத்துக்குமேல் ஒழுங்காக அலுவலகத்தில் இருக்கத் தொடங்கிவிட்டான். நண்பர் கூட்டத்துக்கு வயிற்றில் புளி. ஓட்டலில் தங்காமல் அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தங்க ஆரம்பித்தான் அமர். “அடேய், ஔவையாரை ப்ராக்கெட் போட அண்ணன் நடத்தற ஆரம்ப நாடகமாடா இது?” “சாவப் போறான். அது ஜடம்டா. மூஞ்சில ஒரு சிரிப்புகூட இல்லை. இந்த ஜென்மத்துல அது இவனைக் காதலிக்கும்னு நான் நம்பலை.” நண்பர்கள் அமரேஷை விமர்சிக்கும் நேரத்தில்தான் ரமணி தன் பெட்டி, தோள்பையுடன் நுழைந்தார் அலுவலகத்தில். விவரம் சொல்லி அனுப்பினார். “வரச் சொல்றார்.” ரமணி உள்ளே நுழைந்த சமயம், ஒரு கடிதத்தை நர்த்தனாவுக்கு டிக்டேட் செய்து கொண்டிருந்தான் அமர். “வாங்க அங்கிள்!” “நான் வந்தது தொல்லையா தம்பீ?” “இல்லையில்லை. நீங்க லெட்டரை டைப் பண்ணுங்க நர்த்தனா. உட்காருங்க அங்கிள். அம்மா எப்படி இருக்காங்க?” “சௌக்யமா இருக்காங்க. இந்த லெட்டரை உங்ககிட்ட தந்தாங்க.” வாங்கிக் கொண்டான் அமர். “காப்பி சொல்லட்டுமா அங்கிள்?” “இப்ப அவசியமில்லை தம்பி.” பிரித்தான்அமர். ‘கண்ணே அமர்! உன் அம்மா எழுதுகிறேன். உன்னை விட்டு வெகு நாட்களுக்குப் பிரிந்திருக்க இனி என்னால் இயலாது. நீ இங்கு வந்துவிடு. ஏழெட்டு வருடங்களாக உன் உல்லாச வாழ்க்கைக்கு நான் எந்த இடையூறும் தரவில்லை. இனி வாழ்க்கையில் நீ ஓரிடத்தில் உட்காரும் தருணம் வந்துவிட்டது. உனக்கொரு திருமணம் நடத்த வேண்டும் நான். அதுவும் நான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பெண்ணை. என் சொல்லை நீ மறுக்க மாட்டாய் என்று எப்போதும் நம்புகிறேன். மானேஜர் ரமணி உன்னோடு பத்து நாட்கள் இருப்பார். இது என் உத்தரவு. அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடு. விரைவில் உன்னை நான் சந்திக்க வேண்டும். - அம்மா. நிமிர்ந்தான் அமர். “என்ன தம்பீ?” “நான் இப்ப ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸ்லதான் இருக்கேன் அங்கிள். நீங்களும் என்னோட தங்கிக்கலாம்.” “நன்றி, தம்பி.” மணியடித்தான் அமர். ப்யூன் வர - “இவரை என்னோட கெஸ்ட் ஹவுஸுக்குக் கூட்டிட்டுப்போ. வேண்டிய வசதிகளைச் செஞ்சு குடு. நாம சாயங்காலம் பேசலாம். அங்கிள்.” “சரி, தம்பி.” வெளியே வந்தார் ரமணி. கெஸ்ட் ஹவுஸ் அலுவலகத்தின் பின்னாலேயே இருந்தது. உள்ளே வந்தார். குளியல் முடித்து உடைமாற்றிக் கொண்டதும் சூடான உணவு வந்தது. சாப்பிட்டார். தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் கட்டிலில் சற்று நேரம் படுத்தார். 'மாலை என்ன பேசப்போகிறான் அமர்?' 'வெகு அடக்கமாக, நல்ல பிள்ளையாக குரல்கூட அதிராமல்தானே பேசுகிறான்?’ ‘இதெல்லாம் நடிப்பா?' ‘எனக்கு எல்லாம் தெரியும் என்பது இவனுக்குத் தெரியுமா? இல்லை, என்னிடமும் நடிக்கிறானா?' 'பேசினால் தெரிந்துவிடும்.' ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தபோது மாலை மணி ஐந்தாகிவிட்டது. முகம் கழுவி, காப்பி குடித்தார். மாலைச் சிற்றுண்டி வந்தது. சாப்பிட்டார். அமர் உள்ளே நுழைந்தான். “எல்லாம் வசதியா இருக்கா அங்கிள்?” “இருக்கு தம்பி. நான் உங்ககூடத் தங்கறதுல தம்பிக்கு எதுவும்...?” “எனக்கென்ன கஷ்டம் அங்கிள்.” வெகுநேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இரவுச் சாப்பாடு ஆனது
