கோடைத் தள்ளுபடி
தேவிபாலா
Editorial: Pocket Books
Sinopsis
நரேனைப் பிடித்து தீபா விளாசிக் கொண்டிருந்தாள், கடற்கரையில் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில்! அவனிடம் அதே மௌனம்! “சரி! எங்கம்மா பார்த்த ஆளைக் கட்டிக்கிட்டு நான் புறப்பட்டுப் போறேன்!” “அப்படி நான் விட்டுடுவேனா?” “வேற என்ன கிழிச்சிங்க? இப்படி ஆமையா இருந்தா நான் என்ன செய்வேன்?” “ஓட்டல்ல ரூம் போடட்டுமா?” “எதுக்கு?” “நீயும் நானும் கணவன்-மனைவியா ஒரு ராத்திரி வாழ்ந்துடலாம். அப்புறம் எப்படி உன் கல்யாணம் நடக்கும்?” தீபா முகம் சப்பென மாறியது! “இப்படி பேச உங்களுக்கு வெக்கமால்லை? எப்படி இத்தனை கீழ்த்தரமா ஒரு யோசனை உங்களுக்கு வந்தது?” “தீபா!” “நேரடியா காதலைச் சொல்லி, அதுக்காகப் போராடி, என் கழுத்துல ஒரு தாலியைக் கட்டியிருந்தா, நீங்க சரியான ஆம்பிள! அதை விட்டுட்டு கேவலமான வழியை ஏன் தேர்ந்தெடுக்கணும்?” “விடு! ஏன் கோவப்படற?” “நியாயமான வழியைச் சொல்லுங்க!” “ஒரே வழி ஓடிப்போறதுதான்! ஒரு கோயில்ல வச்சு தாலியைக் கட்டிட்டு பெரியவங்க கால்ல போய் விழவேண்டியதுதான்!” “இது தப்பில்லை! ஆனா இதைவிட கண்யமா நாம சேர முடியாதா?” “எப்படி?” “எங்க வீட்டுக்கு நீங்க வந்து அம்மாகிட்டப் பேசுங்க! என்னைக் கேளுங்க!” “செருப்பால அடிப்பாங்க! உன் கல்யாணத்தை அவங்க நிச்சயிச்ச நேரம், நான் வந்து பெண் கேட்டா சரிப்படுமா? ஒரு நாள் அவகாசம் குடு! வேற ஏதாவது யோசிச்சுச் செய்யலாம்! உனக்குத்தான் நிச்சயமாகியிருக்கு! நீதான் ஏதாவது செஞ்சு நிறுத்தப் பாக்கணும்!” “எப்படி?” “அந்தப் பையன சந்திச்சு பேசிடேன்!” தீபா நிமிர்ந்து உட்கர்ந்தாள். “இது நல்ல யோசனையா இருக்கே!” “உடனே செயல்படுத்து!” தீபா வீடு திரும்பி விட்டாள். ‘அந்த சபரிஷை சந்தித்துப் பேசுவது நல்ல ஐடியாதான்! ஆனால் அதை நிதானமாக, பக்குவமாகச் செய்ய வேண்டும். முடியுமா?’ இரவு முழுக்க உறங்காமலே யோசித்தாள். மனசுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள். காலை வழக்கம் போல புறப்பட்டாள். வகுப்புக்குப் போகவில்லை! சபரிஷின் விப்ரோ விலாசத்துக்கு - தேடிப்பிடித்து வந்து விட்டாள். வரவேற்பில் சொல்லி விட்டுக் காத்திருந்தாள். சபரிஷ் வந்தான். இவளைப் பார்த்ததும் ஆச்சர்யம். “தீபா...! நீயா?” “உங்ககிட்ட நான் பேசணும் சபரிஷ்!” “என் ரூம் இருக்கு. யாரும் வரமாட்டாங்க! உள்ளே வா...!” அவனைப் பின்பற்றி நடந்தாள். அவளை உட்கார வைத்து குளிர்பானத்துக்குச் சொன்னான்! “நீ என்னைத் தேடி வருவேனு நான் கொஞ்சம்கூட எதிர்பாக்கலை தீபா!” அவனை ஒரு நொடி பார்த்தாள் தீபா! “என்னை மன்னிச்சிடுங்க சபரிஷ்!” “எதுக்கு?” “எனக்கு இந்தக் கல்யாணத்துல சுத்தமா விருப்பமில்லை! நான் சொல்லியும் கேக்காம எங்கம்மா அவசரப்பட்டு தாம்பூலம் மாற்றி தேதியும் குறிச்சாச்சு! வாழப்போறவ நான்! இது நியாயமா?” அழத் தொடங்கினாள்
