இரும்புத் திரை!
தேவிபாலா
Verlag: Pocket Books
Beschreibung
மறுநாள் ஹரி சீக்கிரமே ஆபீசை விட்டு வெளியே வந்து விட்டான்!சந்தியா காரில் காத்திருந்தாள்.ஹரி ஆபீசில் பளிச்சென்று தன்னைத் தயார் செய்து கொண்டுதான் வந்தான்!சந்தியா ஏற இறங்கப் பார்த்தாள்.“ஏன் அப்படி பாக்கறே?”“ரொம்ப அழகா இருக்கீங்க! இந்த மாதிரி எல்லா தகுதிகளும் உள்ள ஒருத்தரை மாப்பிள்ளையா யார்தான் வேண்டாம்னு சொல்லுவாங்க?”ஹரி சிரித்தான். கார் புறப்பட்டது.பங்களா கேட் திறக்க, உள்ளே அரை கிலோ மீட்டர் ஓடி கார் நின்றது. சுற்றிலும் பூந்தோட்டம். வளமான - செழிப்பான நாய்கள் இரண்டு காதை விடைத்துக் கொண்டு நிற்க, ஹரி மிரண்டான்!“ஒண்ணும் செய்யாது! தைரியமா வாங்க!”அவளது பார்வையில் நாலு கால் ஜீவன்கள் அடங்கிப் போக, ஹரியுடன் உள்ளே நுழைந்தாள் சந்தியா.உட்கார வைத்தாள். மாளிகைதான்! பிரமிப்பின் உச்சியில் இருந்தான் ஹரி.“அம்மாவை வரச் சொல்றேன்!” - சந்தியா உள்ளே போனாள். ஹரி பார்த்துக் கொண்டே இருந்தான்.சந்தியாவுடன் அந்தம்மா வர, ஹரி எழுந்து நின்று கை கூப்பினான். வசுமதியும் கை கூப்பினாள்.“உட்காருங்க தம்பி!”ஹரி உட்கார்ந்தான். எதிரே வசுமதி கால் மேல் கால் போட்டு உட்கார, அருகில் சந்தியா!ஒரு நொடியில் ஹரியை தன் கண்களால் ஸகேன் பண்ணி விட்டாள் கோடீஸ்வரி வசுமதி!ஹரிக்கு குளிர்பானம் வந்தது.“சாப்பிடுங்க!” - அதை முடிக்கும் வரை காத்திருந்தாள் வசுமதி!“சந்தியா நேத்திக்கு வந்து சொன்ன இந்த 24 மணி நேரத்துல உங்களைப் பற்றி முழுமையா விசாரிச்சிட்டேன். எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு! எல்லா தகுதிகளும் உள்ள ஒரு இளைஞனைத்தான் என் மகள் தேர்ந்தெடுத்திருக்கா! என் மாப்பிள்ளையா உங்களை ஏத்துக்க எனக்கு சம்மதம்!”சந்தியா உற்சாகமாகி விட்டாள்.ஹரியின் முகமும் மலர்ந்தது!“ஆனா சில நிபந்தனைகள் இருக்கு தம்பி!”“என்ன?”“முதல்ல உங்கப்பா சம்பந்தம் பேச இங்கே வரணும். அவர் கிட்ட நான் பேசுவேன்! நாளைக்கு நல்ல நாள்! உங்கப்பா வரமுடியுமா?”“கேக்கறேன்!”“நாளைக்கு விட்டுட்டா, ஒரு மாசத்துக்கு நாட்களும் சரியா இல்லை! எனக்கு நேரமும் இல்லை!”“சரி! நான் அவரைக் கூட்டிட்டு வர்றேன்!”“அவ்ளோதான்! பேசி முடிச்சிட்டா, இந்த மாசக் கடைசில கல்யாணத்தை முடிச்சிடலாம்!”அந்தம்மா எழுந்து உள்ளே போய் விட்டாள்.சந்தியா அருகில் வந்து உட்கார்ந்தாள்.“பாத்தீங்களா? எங்கம்மா பச்சைக் கொடி காட்டிட்டாங்க! நியாயமான ஆசைகளை அம்மா மறுக்கவே மாட்டாங்க!“இரு சந்தியா! எங்கப்பா கிட்ட இனிமேல்தான் நான் பேசணும்!”“பேசுங்க! நாளைக்குத் தானே கூட்டிட்டு வரணும்?”ஹரியிடம் ஒரு கலக்கம் இருந்தது.“என்ன ஹரி?”“தங்கச்சி ராதிகா கல்யாணம் முடியாம, எனக்கு நடத்த அப்பா ஒப்புக்கணுமே!”“தப்பு ஹரி! இந்த எண்ணம் இருந்திருந்தா, ராதிகா கழுத்துல தாலி ஏறின பிறகுதான் நீங்க காதலிக்கவே தொடங்கியிருக்கணும்!”“என்ன சந்தியா இப்படி பேசற?”“முடிவுகளை எடுக்கறதுக்கு முன்னால யோசிக்கணும். எடுத்த பிறகு எது வந்தாலும் ஏத்துக்கணும்! இது எங்கம்மா கத்துக் குடுத்த பாடம்! புறப்படுங்க!”ஹரி காரில் ஏறினான்.“டிரைவர்! அவரை வீட்ல விட்டுட்டு வந்துடுங்க!”சந்தியா உத்தரவிட்டாள். கார் புறப்பட்டது!தன் வீட்டு வாசலில் ஹரி வந்து இறங்க, அப்போதுதான் காய்கறிக் கூடையுடன் அப்பா உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.நேரம் எட்டு மணி - இரவு!“கம்பெனி கார்ல உன்னை ட்ராப் பண்ணினாங்களா?”“இது கம்பெனி கார் இல்லைப்பா!”“ராதிகா! வெங்காயத்தை கட் பண்ணித் தர்றியா?”ஹரி முகம் கழுவி, பர்முடாஸ் அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
