உயிரில் கலந்த உறவே
தோழர் கா.கருமலையப்பன்
Verlag: Pocket Books
Beschreibung
“டேய் ஸ்ரீ! என்னாச்சுடா! உனக்கு? டேய் ஸ்ரீ!” நண்பர்கள் வந்து தன்னை உலுக்கும் வரை ஸ்ரீ கண்களைத் திறக்கவில்லை. தனது ஜானகியுடன் கைகோர்த்து சொர்க்கத்தில் நடந்து கொண்டிருந்தான். அவளுடன் பேசிக்கொண்டே தேவர்களைச் சந்தித்தான். தனக்காக ஜானகியைப் படைத்ததற்கு பிரம்மாவிடம் நன்றி கூறினான். அவளுடன் நான் வாழ்ந்து பூமியில் இன்னொரு சொர்க்கத்தை உருவாக்கிக் காட்டுகிறேன் என சிவனிடம் உறுதியளித்தான். திடும்மென விழித்தவனை நண்பர்கள் கொஞ்சம் பயத்துடன் பார்த்தனர். கூட்டம் குறையத் தொடங்கியிருந்த கடற்கரையை இருள் ஆக்கிரமித்திருக்க ஆங்காங்கே விளக்குகள் பளிச்சிடத் தொடங்கியிருந்தன. அவை பிரம்மாண்டமான விளக்குகள். இதுவரை கண்டது கனவோ? ஸ்ரீ தன்னையே ஒரு முறை குனிந்து பார்த்தான். உடல் முழுவதும் ஈரமண் ஒட்டியிருக்க ஆடை இன்னும் ஈரமாக இருந்தது. நடந்தது கனவல்ல நிஜம் என்றது. எங்கே அவள்? எங்கே சென்று விட்டாள். நான் அவளைப் பார்க்க வேண்டும்! என் இதய தேவதையே எங்கே சென்று விட்டாய்? பரபரவென எழுந்து பார்வையை சுற்றும் முற்றும் தவழ விட்டும் அந்த ஜானகி தென்படவில்லை. குழம்பிப்போன நண்பர்கள் கரையில் கிடந்த கேமரா, தங்களுடைய ஆடைகளைப் பொறுக்கிக்கொண்டு அவசரமாக அவனை அழைத்துக்கொண்டு லாட்ஜுக்குள் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. துருவித் துருவிக் கேட்டாலும் அவன் சொன்ன ஒரே மந்திரம் ஜானகி, ஜானகி. “மோகினி ஏதாச்சும் பிடிச்சிருச்சு போல சிவா! - என்றான் விஷ்ணு. “சேச்சே! நமக்குத் தெரியாதா ஸ்ரீயைப்பத்தி? அவன் எந்தப் பெண்ணையும் இதுவரைக்கும் ஏறெடுத்துக்கூடப் பார்த்ததில்ல. அவன் பேர் மட்டும் இல்ல அவனே அந்த ஸ்ரீராமன்தான்.” “அந்த ஸ்ரீராமனே சீதையைப் பார்த்த உடனே மனசைத் தொலைக்கலையா.” திலீபின் வார்த்தையால் வாயடைத்துப் போனான் சிவா. அப்படியும் இருக்குமோ? அப்படி ஒன்று நடந்தால் சந்தோஷமே.
