அந்த சந்திரனே சாட்சி!
ரமணிசந்திரன்
Casa editrice: Pocket Books
Sinossi
மழை கனம் குறைந்து போய்க் கொஞ்சமாய்த் தூறிக் கொண்டிருந்தது. சாலையோரமாய்க் காரை நிறுத்தியிருந்த சுபலேகா காரின் கதவைத் திறந்து கொண்டு பெரு மூச்சோடு வெளியே வந்தாள். மணிக்கட்டை உயர்த்திப் பார்க்க ஈஷியிருந்த இருட்டில் டிஜிட்டல் கருமையாய்த் தெரிந்தது. சைடிலிருந்த பட்டனைத் தடவி அமுக்கினாள். மிக சொற்ப வெளிச்சம் டிஜிட்டல் ஸ்க்ரீனைக் கழுவிவிட -“ஊஹீம் அரைமணி நேரம் காத்திருந்தாகிவிட்டது பூச்சி பொட்டு நடமாடக் காணோம். கார் சனியன் சமயம் பார்த்து மக்கர் ஆகிக் கழுத்தறுக்கிறது.”நிமிர்ந்து பார்த்தாள். கொஞ்ச தூரத்தில் குன்னூர் வெளிச்சப் புள்ளிகளோடு தெரிந்தது. மேலே நீராவி மாதிரி பனிப்புகை.‘ஒரு கிலோ மீட்டர் இருக்குமா? பேசாமல் காரைப் பூட்டி சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு போய் விட்டாலென்ன? அப்புறமாய் சின்னசாமியை அனுப்பி காரை கொண்டு வரச் சொல்லிவிடலாமே?’நினைக்க நினைக்கவே நேற்று முன் தினம் எதற்கோ வித்யாசாகர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.‘அம்மா சுபலேகா இந்த ஸீஸன்லே காட்டு யானைங்க நடமாட்டம் ஜாஸ்தி. அவளைப் பார்க்கணும்னுட்டு சிடியை தாண்டின இடங்களுக்கெல்லாம் தனியா போயிடாதே... தெரிஞ்சுதா?”தனியாக நடந்து போகவும் தயக்கமாயிருந்தது.‘என்ன செய்யலாம்...அழுத்தமாகக் கையை பிசைந்தாள் சுபலேகா. காரின் முன் பக்கமாக வந்து பானட்டைத் திறந்தாள். சுற்றி டிரைவர் ஸீட்டுக்குப் போய் டாஷ்போர்டிலிருந்த ஸ்விட்ச் ஒன்றை அழுத்திவிட பானட்டுக்கும் வெளிச்சம் பிறந்தது.ஆயில் அடித்துக் கிடந்த எஞ்சின் மேல் மழை காரணமாக மண்ணும் அப்பிக் கிடந்தது. புரியாத ஒயர்கள் கசாமுசாவென்று பின்னிக்கொண்டு புரண்டிருக்க -‘எதற்காக பானட்டைத் திறந்தோம்?’ தன்னையே கேட்டுக்கொண்டு யோசித்தாள் சுபலேகா.பாண்ட்டிலினின்றும் தலையை எடுக்க-மறுபடியும் கவலை ஒட்டிக் கொண்டது. மெல்லமாய்த் திருப்பினபோது அந்த ஹேர்பின் வளைவுக்கு அந்தப்புறம் ர்ர்ர்ர்’ரென்ற இரைச்சலும், ஹெட்லைட் வெளிச்சமும்.பஸ்ஸா?ஆர்வமாய் எட்டிப் பார்த்தாள்.அல்ல வேன். கையை ஆட்டினாள்.இரைச்சலோடு நெருங்கின அந்த வேன் காரைக்கடக்கு போது மெல்ல ஊர்ந்து கொஞ்சம் தள்ளி நின்றது க்ளக்-கெ கதவுகள் திறந்து கொள்ள இரண்டு பேர்கள் இறங்கினார்கள்.தன்னந்தனிமை சுபலேகாவின் மனசுக்குள் ஒரு இறுக்கமான பயத்தைச் சுழற்றியது.‘கடவுளே, வருகிறவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்!’நெருங்கின அவன் கெச்சலாய்த் தெரிந்தான். தலை முடி பம்மியிருந்தது. மணிக்கட்டு வரை ஸ்வெட்டர் கனமாய் மூடியிருந்தது. இருட்டில் பற்கள் வெள்ளைக் கோடாய் தெரிய சிரித்தவன் கேட்டான்.“என்னம்மா இந்நேரத்துலே காரை இப்படி நிப்பாட்டிட்டு தன்னந்தனியா நிக்கறே?”இன்னொருத்தனும் அவனோடு வந்து இணைந்து நின்று கொண்டான். வேண்டாத சதைகளை உடம்பில் வாங்கியிருந்தான். நடு மண்டையில் முடி காணாமல் போயிருந்தது. சின்னக் கண்கள் வேகமாய் சுழன்றது. தடிமான உதட்டுக்கு மேலும் கீழும் மீசையில்லாமல், தாடியில்லாமல் வழவழா“வந்துட்டிருந்தேன். கார் பாதில ரிப்பேர் ஆயிடுச்சு” மெல்லிய குரலில் சுபலேகா சொல்ல -அவன் கேட்டான். “ரிப்பேர் கூட பார்ப்பியா?”புரியாமல் தலை உயர்த்தினாள்.“பானட்டெல்லாம் திறந்து வச்சிருக்கே?”“ரிப்பேர் பார்க்கத் தெரியாது சும்மா திறந்து பார்த்தேன்.”இரண்டு பேருமே சிரித்தார்கள். சிரித்துக்கொண்டே பிளந்து கிடந்த காரின் முன்புறத்தை நெருங்கினார்கள்
